search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசல் ஓட்டிகள்"

    ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    பென்னாகரம்:

    தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தினந்தோறும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் குளித்து மகிழ்வார்கள்.

    மேலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசிப்பார்கள். கர்நாடக மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யும் போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்படும். அப்போது காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்படும்.

    அதன்படி கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகமாக இருந்தது. இதனால் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வருகிறது.


    நீர்வரத்து குறைந்துள்ளதால் 4 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் பரிசல்களை இயக்காமல் பரிசல் ஓட்டிகள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நேரங்களில் பரிசல்கள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தண்ணீரின் அளவை பொறுத்து மாமரத்துகடவு பரிசல் துறை, ஊட்டமலை பரிசல் துறை, கோத்திக்கல் பரிசல் துறை ஆகிய 3 வழிகளில் பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும். பரிசல் பயணத்தின் போது சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட்டுகளை(பாதுகாப்புஉடை) அதிக அளவில் வழங்க வேண்டும் என்றனர். மொத்தம் 420 பரிசல் ஓட்டிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பரிசல்கள் காவிரி கரையோரத்தில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. 
    ×